நிலா!
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
காதல்!
நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்தவையா?
உன் பாதம்பட்ட பூரிப்பில் நிலம் பூத்தவையா?
உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வருகிறது மழை.
இரண்டுக்கும் பயந்து
உன் காலுக்கடியில் பதுங்குகிறது பூமி!
தொலைதூர பயணங்களில்
காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன
செல்பேசி உரையாடல்களை
கனவின் அலைவரிசையில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!
குளிர்வேலிக்குள் இருப்பதாய் உணர்கிறேன்.
கண்ணுக்கு மையை
அதிகமாய் தீட்டிவிட்டாயோ?
செல்பேசியில் எனது பேச்சு
இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.
இதயத்திலிருந்து வருவதால்
‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!
-Arutperungo